கி.வீரமணி 
செய்திகள்

பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பெயரை மாற்றியது ஏன்?- கி.வீரமணி கண்டனம்

பெரியார் ஈ.வே.ரா. சாலையின் பெயரை தமிழக அரசு ஓசையின்றி மாற்றிவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை:

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தந்தை பெரியாரது நூற்றாண்டு விழாவை ஓராண்டு விழாவாக தொடர்ந்து நடத்திய எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்த அ.தி.மு.க. அரசு 1979- பூந்தமல்லி நெடுஞ்சாலை என்ற பெயரை ‘பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை’ என்று பெயர் மாற்ற மக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். அவ்வாறு மாற்ற அரசாணை பிறப்பித்தார்.

அதனை இப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு நெடுஞ்சாலை துறை இணையதளத்தில் ‘கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு’ என்று பெயர் மாற்றம் செய்தது ஏன்?

யாரை திருப்தி செய்ய? என்ன பின்னணி? வி‌ஷமத்திற்கு யார் காரணம்? யார் பொறுப்பு?

அதை வன்மையாகக் கண்டிக்கிறோம். உடனடியாக அதை இணையதளத்தில் இருந்து நீக்கி, ‘பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை’ என்று மாற்றாவிட்டால் கடுங்கிளர்ச்சி வெடிப்பது உறுதி! உறுதி!!

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.