ஜான்குமார் 
செய்திகள்

புதுவையின் நலனுக்காக ராஜினாமா செய்தேன்- ஜான்குமார் பேட்டி

புதுவை நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக ராஜினாமா செய்துள்ளேன் என்று ஜான்குமார் கூறினார்.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து தொடர்ந்து ராஜினாமா செய்து வருகின்றனர்.

கடந்த மாதம் 18-ந் தேதி அமைச்சர் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ. ஆகியோர் ராஜினாமா செய்தனர்.

இதனைத்தொடர்ந்து மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வார்கள் என்ற தகவல் பரவியது. ஆனால் 4 வாரமாக யாரும் ராஜினாமா செய்யவில்லை.

இந்நிலையில் நேற்று ஏனாம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் டெல்லியில் முகாமிட்டிருந்த காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் தனது ஆதரவாளர்களோடு ஆலோசனை செய்து முக்கிய முடிவு எடுப்பதாக தெரிவித்திருந்தார்.

இரவோடு இரவாக புதுவைக்கு திரும்பிய ஜான்குமார் இன்று காலை தனது ஆதரவாளர்களோடு ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து சட்டசபை வளாகத்துக்கு வந்து சபாநாயகர் சிவகொழுந்துவிடம், ஜான்குமார் எம்.எல்.ஏ. தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

ராஜினாமா குறித்து ஜான்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, எந்த பதிலும் சொல்ல மறுத்தார். புதுவை நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக ராஜினாமா செய்துள்ளேன் என்று கூறினார்.