சென்னை:
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டின் பல பகுதிகள் மட்டுமன்றி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் எண்ணெய் எரிவாயு குழாய் அமைக்கும் முயற்சியில் இந்தியன் ஆயில் நிறுவனம் இறங்கியுள்ளது.
காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தின் பிற பகுதிகளில் எண்ணெய் எரிவாயு குழாய் அமைக்க இயலாது என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் குழாய்களை அமைக்கும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருவது கடுமையான ஆட்சேபனைக்கு உரியது.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, மற்றும் விழுப்புரம் என ஏழு மாவட்டங்களில் 14 வட்டங்களில் எழுபத்தி ஏழு ஊர்களில் உள்ள ஏராளமான விவசாயிகளின் வயல்களில் எண்ணெய் எரிவாயு குழாய் பதிக்க உள்ளதாக பத்திரிக்கைகளில் இந்தியன் ஆயில் நிறுவனம் கடந்த செப்டம்பர் 3-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இருபத்தி ஏழு நாட்களுக்குள் நில உரிமை மாற்றம் உள்ளவர்கள் மட்டும் தெரிவிக்கலாம் என்று கூறி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் ஆட்சேபனைகளை தெரிவிக்க போதிய அவகாசம் வழங்கப்படவில்லை. தமிழக விவசாயிகளின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும் இந்த அடாத செயலை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம். தமிழக அரசு இந்த விசயத்தில் உடனடியாக தலையிட்டு டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்...கருப்பு கொடி ஏற்றி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்போம் - தொண்டர்களுக்கு கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்