செல்போன் 
செய்திகள்

காஷ்மீரில் மீண்டும் செல்போன் இணைய சேவை முடக்கம்

காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மக்கள் கூடுவதை தவிர்க்க பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மாலை மலர்

ஸ்ரீநகர்:

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையத் அலிஷா கிலானி (வயது 91). கடந்த 1-ந் தேதி இரவு மரணம் அடைந்தார்.

நீண்ட கால உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் ஸ்ரீநகரில் உள்ள வீட்டில் காலமானார்.

அவரது மறைவையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரின் பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மக்கள் கூட்டமாக கூடுவதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. செல்போன், இணைய சேவைகள் நிறுத்தப்பட்டன. கிலானியின் உடல் அவரது வீட்டு அருகே உள்ள மசூதியில் அடக்கம் செய்யப்பட்டது.

இதற்கிடையே சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. மேலும் நேற்று இரவு இணைய சேவை மற்றும் செல்போன் சேவை மீண்டும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை செல்போனில் இணையதள சேவை மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மக்கள் கூடுவதை தவிர்க்க பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ஸ்ரீநகரில் பழைய நகரம் மற்றும் ஹைதர்போரா கிலானியின் வீட்டுக்கு செல்லும் சாலைகளில் மக்கள் நடமாட்டத்தை தடுப்பதற்காக தடுப்புகள் போடப்பட்டு மூடப்பட்டுள்ளன.

சட்ட ஒழுங்கை பராமரிப்பதற்காக நகரத்திலும், மற்ற இடங்களிலும் பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றார்.