சென்னை:
ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக மெரினா கடற்கரையில் நடையிற்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
காலை 6 மணியில் இருந்து காலை 9 மணி வரையில் பொதுமக்கள் மெரினா கடற்கரை சாலையில் நடைபயிற்சி செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக மெரினா கடற்கரையில் நடைபயிற்சி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 3 மணி நேரம் மட்டுமே நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும், அதன்பிறகு நடைபயிற்சியை முடித்துகொண்டு பொதுமக்கள் அங்கிருந்து சென்று விட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நடைபயிற்சிக்கு வருபவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு கடற்கரை பகுதியில் ஒன்றாக அமர்ந்து பேசுவது தெரியவந்தது. அதே நேரத்தில் பலர் கடற்கரை மணல் பகுதிக்கு சென்று அமர்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அதுபோன்று கொரோனா விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
இதன்படி இணை ஆணையர் ராஜேந்திரன், துணை கமிஷனர் பகலவன் ஆகியோர் மேற்பார்வையில் அண்ணா சதுக்கம் போலீசார் மெரினாவில் டிரோன் மூலம் கண்காணித்து வருகிறார்கள். நடைபயிற்சி செல்பவர்கள் மணல் பகுதிக்கு செல்வதை கண்டுபிடிக்க டிரோன் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் பாஸ்கர் தலைமையில் இந்த நடவடிக்கை முடிக்கிவிடப்பட்டு உள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், கடற்கரையில் அதிகளவில் பலர் கூடினார்கள். நடைபயிற்சியை மேற்கொள்ள வந்திருந்த பலர் முகக்கவசம் அணியாமல் வந்திருந்தனர்.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று முகக்கவசம் அணியாதவர்களுக்கு முகக்கவசங்களை வழங்கினர்.
மணல்பரப்பில் அமர்ந்திருந்த பலரை மணலில் செல்லும் வாகனம் மூலமாக சென்று எச்சரித்து வெளியேற்றினார்கள்.
பின்னர் போலீசார் ஒலிபெருக்கி மூலம் கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டனர். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். உங்கள் வீட்டில் உள்ளவர்களையும் முகக்கவசம் அணிய வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
காலை 6 மணிக்கு நடைபயிற்சிக்கு வருபவர்கள் 9 மணிக்குள் நடைபயிற்சியை முடித்து கொண்டு சென்று விட வேண்டும் என்றும் போலீஸ் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்...சமையல் கியாஸ் விலையை கட்டுப்படுத்த இல்லத்தரசிகள் கோரிக்கை