அமெரிக்க கொடி 
செய்திகள்

இந்திய மாணவர்களுக்கு உடனே விசா வழங்க வேண்டும்- அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்.1பி விசாவுக்கு தடை விதித்தது. அதேபோல் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் விசாக்களுக்கும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.

மாலை மலர்

வாஷிங்டன்:

அமெரிக்காவில் பட்டப் படிப்புகளை படிக்க இந்திய மாணவர்களிடம் ஆர்வம் அதிகமாக இருந்து வருகிறது. இதற்காக ஆண்டு தோறும் ஏராளமானோர் விசாவுக்கு விண்ணப்பிக்கிறார்கள்.

தற்போது அமெரிக்காவில் 1 லட்சத்துக்கு மேற்பட்ட இந்திய மாணவர்கள் பல்வேறு பல்கலைக் கழகத்தில் படித்து வருகிறார்கள். இதற்கிடையே கொரோனா பரவல் காரணமாக விசா நடைமுறையில் அமெரிக்கா கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.

வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்.1பி விசாவுக்கு தடை விதித்தது. அதேபோல் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் விசாக்களுக்கும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.

இதனால் இந்திய மாணவர்கள் உள்பட பல நாட்டு மாணவர்கள் அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது விசா கட்டுப்பாடுகளை அதிபர் ஜோபைடனின் நிர்வாகம் தளர்த்தி வருகிறது.

ஆனாலும் அடுத்த கல்வி ஆண்டில் பல்கலைக்கழகங்களில் சேர விசாவுக்கு விண்ணப்பிப்பதில் முழுமையான செயல்பாடு நடை முறைக்கு இன்னும் வரவில்லை. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அவசர விசாக்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில் சர்வதேச மாணவர்களுக்கு விசா வழங்கும் செயல்முறையை விரைவுப்படுத்த வேண்டும் என்று அதிபர் ஜோபைடன் நிர்வாகத்தை அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த செல்வாக்கு மிக்க செனட்டர்கள் குழுவினர் வெளியுறவு மந்திரி பிளிங்டனுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வரும் நிலையில் மாணவர் விசாக்களின் செயல்பாடு மெதுவாக இருப்பது குறித்து எங்களின் கவலைகளை வெளிப்படுத்த இந்த கடிதத்தை எழுதி உள்ளேன்.

நாம் இந்த கல்வியாண்டில் முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். சர்வதேச மாணவர்களுக்கு விசா வழங்கும் செயல்முறையை உடனே துரிதப்படுத்த வேண்டும்.

மாணவர்கள் அமெரிக்காவில் தங்கள் படிப்பை தொடங்க விசாக்கள் சரியான நேரத்தில் கிடைக்குமா? என்பது குறித்து உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

அமெரிக்காவுக்கு வரும் சர்வதேச மாணவர்கள் உயர் கல்வி முறை மற்றும் நமது பொருளாதாரத்துக்கு குறிப்பிடத்தக்க அத்தியாவசிய மதிப்பை வழங்குகிறார்கள்.

இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20.23 கோடியை கடந்தது