கோப்புப்படம் 
செய்திகள்

சீனாவில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் - இந்தியாவில் வைரலாகும் புகைப்படம்

எரிபொருள் விலை உயர்வை எதிர்த்து ஜெர்மனியில் நடத்தப்பட்ட போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து வருகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படுவது அன்றாட வழக்கமாக மாறி இருக்கிறது. இந்த நிலையில், கார்கள் மிக நீண்ட வரிசையில் நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

வைரலாகும் புகைப்படம் ஜெர்மனியில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஜெர்மனியில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து மக்கள் தங்களின் வாகனங்களை சாலையின் நடுவே நிறுத்தியதாக வைரல் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் போராட்ட புகைப்படத்தை பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் நம் நாட்டிலும் இதுபோன்ற போராட்டம் நடத்த வேண்டும் எனும் தலைப்பிட்டுள்ளனர். சிலர், `எரிபொருள் விலை உயர்வு கண்டித்து ஜெர்மனி மக்கள் தங்களது வாகனங்களை வீதியில் நிறுத்தி போராடினர். பத்து லட்சம் கார்கள் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து அந்நாட்டு அரசு எரிபொருள் விலையை குறைத்தது.' எனும் தலைப்பில் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது சீனாவின் ஷென்சென் நகரில் ஏற்பட்ட மாபெரும் போக்குவரத்து நெரிசலின் போது எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் 2012 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதுபற்றிய இணைய தேடல்களில் வைரல் புகைப்படம் விற்பனைக்கு கிடைப்பது தெரியவந்தது.

அந்த வகையில் நாடு முழுக்க இணையத்தில் வைரலாகும் புகைப்படம் பொது மக்கள் போராட்டத்தின் போது எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

SCROLL FOR NEXT