புதுடெல்லி:
சீனாவின் வுகான் மாகாணத்தில் முதல்முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்பின், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனாவில் இருந்து மக்கள் தப்பித்துக் கொள்ள நாடு முழுவதிலும் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இரண்டு தவணை தடுப்பூசிகள் எடுத்துக்கொண்டவர்களுக்கு கூட கொரோனா தொற்று ஏற்படுகிறது.
இந்நிலையில், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களையும் டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிக்கும் என சென்னையில் ஐ.சி.எம்.ஆர். நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஐ.சி.எம்.ஆர். ஆய்வு கூறுகையில், டெல்டா வகை கொரோனா வைரஸ், தடுப்பூசி போட்டவர்கள் மற்றும் தடுப்பூசி போடாத நபர்களையும் பாதிக்கும் திறன் கொண்டது என கண்டறியப்பட்டு உள்ளது. ஆனால், இரண்டு தவணை தடுப்பூசி போட்ட நபர்களையும் டெல்டா வகை வைரஸ் பாதிக்கும். பாதிப்பின் பொழுது உயிரிழப்பு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தின் விஞ்ஞானி ஜெரோமி தங்கராஜ் கூறுகையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை விட தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை இந்த டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிக்கும் பொழுது உயிரிழப்பு மிக குறைவாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.