சித்ரா-ஹேம்நாத் 
செய்திகள்

நடிகை சித்ரா தற்கொலை வழக்கு- ஜாமீன் கோரி ஹேம்நாத் மனு

நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யவும், மேலும் ஜாமீன் மனு மீது வருகிற 18-ந் தேதிக்குள் பதிலளிக்கவும் காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மாலை மலர்

சென்னை:

பாண்டியன் ஸ்டோர் உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை சித்ரா. இவர் கடந்த மாதம் 9-ந் தேதி பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்தபோது, பூட்டிய அறைக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்த வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

அவரது கணவர் ஹேம்நாத் (வயது 31) செய்த சித்ரவதை தாங்காமல்தான், சித்ரா தற்கொலை முடிவை எடுத்ததாக கூறப்பட்டது. இதனால் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் ஹேம்நாத் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டன.

இந்த நிலையில் நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேம்நாம் மனு தாக்கல் செய்தார். அதில் தனக்கும் சித்ராவுக்கும் எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை என ஹேம்நாத் மனுவில் தெரிவித்து இருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யவும், மேலும் ஜாமீன் மனு மீது வருகிற 18-ந்தேதிக்குள் பதிலளிக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.