வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறையின் முக்கிய பருவகாலமாக விளங்கக்கூடிய குளிர்பனிக்காலம் கடந்த நவம்பர் மாதம் 2-வது வாரம் முதல் தொடங்கியது. இதனால் வால்பாறை பகுதி முழுவதும் காலை முதல் மாலை வரை நல்ல வெயிலும், இரவு முதல் அதிகாலை வரை கடுமையான குளிரும் நிலவி வருகிறது. இந்த காலநிலை வருகிற பிப்ரவரி மாதம் வரை நிலவும். இதனை அனுபவிக்க ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அதன்படி இந்த ஆண்டும் சமவெளி பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பலரும் வால்பாறைக்கு வர தொடங்கி விட்டனர்.
இந்த நிலையில் வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய லேசான மழை பெய்தது. இதனால் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. குறிப்பாக அய்யர்பாடி எஸ்டேட் முதல் ஆழியாறு பகுதி வரை பனிமூட்டமும், குளிரும் நிலவியது.இந்த பனிமூட்டம் காரணமாக மலைப்பாதையில் சென்ற அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி ஊர்ந்து சென்றன. மேலும் வெளியூர்களில் இருந்து வந்த டிரைவர்கள் வாகனங்களை ஒட்ட முடியாமல் அவதிப்பட்டனர். இது தவிர சிலர் சாலை ஒரங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு பனிமூட்டத்துடன் புகைப்படம் எடுத்து, காலநிலையை அனுபவித்தனர். பனிமூட்டம் குறைந்த பிறகு வாகனங்களை ஒட்டி சென்றனர்.
அட்டகட்டி பகுதியில் இருந்து அய்யர்பாடி எஸ்டேட் பகுதி வரை பனிமூட்டம் காரணமாக டிரைவர்கள் எளிதாக வாகனங்களை ஒட்டி செல்வதற்கு வசதியாக நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையில் வெள்ளை கோடுகள் வரையப்பட்டும், ஒளிரும் சிலிக்கான் வில்லைகள் பதிக்கப்பட்டும் இருந்தது. ஆனால் அந்த வெள்ளை கோடுகள் முழுவதும் பல இடங்களில் அழிந்துவிட்டது. சிலிக்கான் வில்லைகளும் உடைந்து போய் விட்டது. இதனால் பனிமூட்டம் நிலவும் நேரத்தில் வாகனங்களை ஒட்ட அவதி அடைவதாக டிரைவர்கள் தெரிவித்தனர். எனவே நெடுஞ்சாலை துறையினர் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் அழிந்த நிலையில் உள்ள வெள்ளை கோடுகளை மீண்டும் போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.