பலி 
செய்திகள்

ராமநாதபுரத்தில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து மூதாட்டி பலி

ராமநாதபுரத்தில் பெய்த கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து மூதாட்டி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. மழையின் காரணமாக சாலைகள் பல இடங்களில் சேதமடைந்துள்ளன.

இந்த நிலையில் நேற்று இரவும் மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

ராமநாதபுரம் முனியசாமி கோவில் தெருவைச் சேர்ந்த தொழிலாளி அங்குசாமி என்பவரது வீட்டுச்சுவர் மழையால் இடிந்து விழுந்தது.

அப்போது வீட்டிற்குள் படுத்திருந்த அங்குசாமியின் மனைவி ரெத்தினம் அம்மாள் (வயது 75) மீது சுவர் விழுந்தது. பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்ததும் ராமநாதபுரம் தாசில்தார் ரவிச்சந்திரன் நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையால் ஆங்காங்கே சாலைகளிலும் வீட்டின் அருகிலும் மழைநீர் தேங்கி உள்ளது. போர்கால நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் தண்ணீரை குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT