கொள்ளை 
செய்திகள்

குடியாத்தம் பாத்திரக்கடையில் ரூ.3 லட்சம் கொள்ளை

குடியாத்தம் பாத்திரக்கடையில் ரூ.3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடியாத்தம்:

குடியாத்தம் டவுன் கோபாலபுரம் மசூதி தெருவை சேர்ந்தவர் உஸ்மான். இவர் அங்குள்ள மசூதி அருகே 3 அடுக்கு மாடி கொண்ட கட்டிடத்தில் பாத்திரக் கடை நடத்தி வருகிறார்.

கடையின் 3-வது மாடியில் தகரத்திலான கூரை அமைத்து உள்ளனர். உஸ்மான் நேற்று இரவு வழக்கம்போல் வியாபாரம் முடித்து வீட்டுக்கு சென்றார்.

நள்ளிரவு பக்கத்து மாடி வழியாக வந்த கொள்ளையர்கள் தகரக் கூரையை பிரித்து உள்ளே சென்றனர். அங்கிருந்த ரூ.3 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இன்று காலை கடையை திறப்பதற்காக உஸ்மான் மற்றும் கடை ஊழியர்கள் வந்தனர். அப்போது கடையில் இருந்த பணப்பெட்டி திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உஸ்மான் குடியாத்தம் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு குடியாத்தம் டி.எஸ்.பி. சரவணன் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் சப்இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.