தர்மபுரி:
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 5-வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேகர், மாநில துணைத்தலைவர் பழனியம்மாள், மாவட்ட பொருளாளர் புகழேந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
அகவிலைப்படி சரண்டர் உள்ளிட்ட பறிக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம், ஒப்பந்த ஊதியம் ஆகியவற்றை ரத்து செய்து வரையறுக்கப்பட்ட ஊதிய முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் அளிக்க வேண்டும்.
தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், கிராமப்புற நூலகர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு அரசு துறைகளில் வேலை வாய்ப்பகளை வழங்க வேண்டும் என்பவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.
கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 59 அரசு ஊழியர்களை தர்மபுரி டவுன் போலீசார் கைது செய்தனர்.