அரசு பஸ் பள்ளத்தில் இறங்கிய காட்சி. 
செய்திகள்

கோமுகி அணை அருகே அரசு பஸ் பள்ளத்தில் இறங்கியதால் பரபரப்பு

கோமுகி அணை அருகே சாலை அகலப்படுத்தும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் அரசு பஸ் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாலை மலர்

கள்ளக்குறிச்சி:

கச்சிராயபாளையம் பகுதியிலிருந்து எடுத்தவாய்நத்தம் செல்லும் சாலையில் கல்வராயன் மலை அடிவாரம் வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல லட்சம் மதிப்பில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சாலையின் ஒரு பகுதியில் சுமார் 2 அடி அகலத்திற்கு பள்ளம் தோண்டி விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை கள்ளக்குறிச்சியில் இருந்து எடுத்தவாய்நத்தம் நோக்கி அரசு பஸ் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அதில் பரிகம், எடுத்தவாய்நத்தம், மட்டப்பாறை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். 

கோமுகி அணை அருகே வந்தபோது சாலை அகலப்படுத்தும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பஸ்சின் இடது பக்கவாட்டு சக்கரங்கள் இறங்கி கவிழ முயன்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் கூச்சல் எழுப்பினர். உடனே சுதாரித்துக்கொண்ட டிரைவர் பிரேக் பிடித்து பஸ்சை நிறுத்தினார். இதனால் பஸ் பயணிகள் அனைவரும் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர்.

பின்னர் பயணிகள் அனைவரும் மாற்று பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு விபத்துக்குள்ளான பஸ் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியல் பரபரப்பு ஏற்பட்டது. கல்வராயன்மலை மற்றும் எடுத்தவாய்நத்தம் பகுதிக்கு தினசரி 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்வதால் சாலை விரிவாக்கப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.