முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் 
செய்திகள்

முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நலமுடன் உள்ளார் - கைலாஷ் விஜய்வர்க்கியா தகவல்

முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மரணம் பற்றிய தகவல் புரளி. அவர் நலமுடன் உள்ளார் என கைலாஷ் விஜய் வர்க்கியா தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

பாராளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன். இவர் மரணமடைந்து விட்டார் என நேற்று புரளிகள் கிளம்பின. ஆனால், இதில் உண்மை இல்லை என பா.ஜ.க. மூத்த தலைவர் கைலாஷ் விஜய் வர்க்கியா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மக்களவையின் முன்னாள் சபாநாயகர் மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுமித்ரா மகாஜன் நலமுடனேயே உள்ளார்.  அவரை பற்றிய மரண செய்திகள் வெறும் வதந்தியே என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் வெளியான செய்தியில், சுமித்ராவுக்கு காய்ச்சல் உள்ளது. அவர் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் பாதிப்பு இல்லை என்று முடிவுகள் வெளிவந்தன.

இதற்கிடையே, காங்கிரஸ் எம்.பி.யான சசிதரூர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், பா.ஜ.க.வின் மூத்த தலைவர் மற்றும் இந்தூர் தொகுதியை சேர்ந்த மிக நீண்டகால பெண் எம்.பி.யான சுமித்ரா மகாஜன் மறைந்து விட்டார் என்ற செய்தியை அறிந்து வருத்தமடைந்தேன் என பதிவிட்டார்.  ஆனால், இதற்கு பா.ஜ.க. மறுப்பு தெரிவித்துள்ளது.