பூ மார்க்கெட் 
செய்திகள்

ஆடி அமாவாசையையொட்டி பூக்கள் விலை உயர்வு

ஆடி அமாவாசையையொட்டி பூக்களின் விலை அதிகரித்தது. ஒரு கிலோ மல்லிகை ரூ.500-க்கு ஏலம் கேட்கப்பட்டது.

மாலை மலர்

கரூர்:

கரூர் ரெயில்வே ஜங்சன் அருகே மாரியம்மன் பூ மார்க்கெட் உள்ளது. இந்த பூ மார்க்கெட்டிற்கு மாயனூர், தளவாய்பாளையம், கூடலூர், பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த பூக்களை பறித்து விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

ஏலம் மூலம் பூக்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஏலத்தில், பூக்கடை வைத்திருப்போர், பூ கட்டி விற்போர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆடி அமாவாசையையொட்டி நேற்று பூக்களின் விலை அதிகரித்தது. ஒரு கிலோ மல்லிகை ரூ.500-க்கு ஏலம் கேட்கப்பட்டது.

மற்ற பூக்களின் விலை(ஒரு கிலோ) விவரம் வருமாறு:-

முல்லை பூ-ரூ.400, ஜாதிப்பூ -ரூ.150, அரளிப்பூ-ரூ.150, ரோஜா-ரூ.150, சம்மங்கி -ரூ.150 முதல் ரூ.180, மரிக்கொழுந்து 1 கட்டு-ரூ.40, துளசி 1 கட்டு-ரூ.15-க்கு விற்பனையானது. வியாபாரிகள் வாங்கி சென்று வீட்டில் வைத்து அவற்றை மாலையாக கோர்த்து விற்பனை செய்யும் போது இன்னமும் விலை அதிகரிக்கக்கூடும்.

விலை உயர்வு குறித்து பூ மார்க்கெட் தலைவர் கே.சி.பி.முருகேசன் கூறுகையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு மல்லிகை 1 கிலோ ரூ.250 முதல் ரூ.300-க்கும், முல்லை ரூ.150 முதல் ரூ.180 வரை விற்பனை ஆனது. ஆடி வெள்ளிக்கிழமை மற்றும் ஆடி அமாவாசையையொட்டி பூக்களின் விலை அதிகரித்து உள்ளது என தெரிவித்தார்.