திற்பரப்பு அருவி 
செய்திகள்

குமரியில் தொடர் மழை- திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு

குமரியில் பெய்து வரும் தொடர் மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

மாலை மலர்

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று மலையோர பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து உள்ளது.

சிற்றாறு அணை பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் அந்த பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சிற்றாறு 1-ல் அதிகபட்சமாக 87.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை கொட்டித்தீர்த்தது.

நாகர்கோவிலிலும் நேற்று இரவு விட்டு விட்டு மழை பெய்தது. கொட்டாரம், மயிலாடி, சுசீந்திரம் பகுதியில் இன்று காலையில் சாரல் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் மிதமான மழை பெய்தது. ஆனால் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.60 அடியாக இருந்தது. அணைக்கு 818 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 468 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 70 அடியாக உள்ளது. அணைக்கு 197 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 13.84 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 13.94 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 20.60 அடியாக உள்ளது.

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

பேச்சிப்பாறை-33.6, பெருஞ்சாணி-8.8, சிற்றாறு 1-87.8, சிற்றாறு 2-73, மாம் பழத்துறையாறு-41, நாகர்கோவில்-12.4, பூதப்பாண்டி-25.2, சுருளோடு-12.4, கன்னிமார்- 11.2, ஆரல்வாய்மொழி-6, பாலமோர்-64.4, மயிலாடி-5.4, கொட் டாரம்-1.2, ஆனைக்கிடங்கு-37.2, அடையாமடை-59, கோழிப்போர் விளை-4, திருவட்டார்-2.6, முள்ளங்கினாவிளை-7, திற்பரப்பு-13.4.