மீனவர்கள் 
செய்திகள்

தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பகுதியில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இவர்கள் தடைகாலங்களில் படகு, வலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

ராமேசுவரம்:

மீன் வளத்தை பாதுகாக்கும் வகையில், மீன்களின் இனப்பெருக்க காலத்தை யொட்டி தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது. இதையடுத்து நள்ளிரவு முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல உள்ளனர்.

தூத்துகுடி மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. மீனவர்கள் தடைகாலத்தின்போது படகுகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். படகுகள் சரிபார்க்கப்பட்டு அவற்றை வெள்ளோட்டம் பார்த்தனர். இன்று நள்ளிரவு முதல் அவர்கள் கடலுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். இதேபோல் நெல்லை மாவட்டம் திசையன்விளை, கூடங்குளம், கூட்டப்புளி பகுதி மீனவர்களும் கடலுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பகுதியில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இவர்கள் தடைகாலங்களில் படகு, வலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் கரையோரங்களில் போதுமான இடங்கள் கிடைக்காததால் ஒருசில மீனவர்களின் படகுகளை சீரமைக்க முடியாமல் உள்ளனர். இதனால் ராமேசுவரம், பாம்பன் ஆகிய பகுதி மீனவர்கள் ஒன்றிணைந்து வருகிற 30-ம் தேதி மீன்பிடிக்க செல்லலாம் என முடிவு செய்தனர்.

ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தை ஒட்டிய கடலோரப் பகுதி மீனவர்களும் தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம் ஆகிய பகுதிகளிலிருந்து மீனவர்கள் நாளை மீன்பிடிக்க செல்லும் நிலை இருந்தால் ராமேசுவரம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்லலாம் என ஒரு மீனவர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் ராமேசுரம், பாம்பன் மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து சின்ன ஏர்வாடி விசைப்படகு மீனவர் சங்க செயலாளர் அனஸ்டின் கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் சின்ன ஏர்வாடி, கீழக்கரை, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதிகளில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கு தயாரான நிலையில் உள்ளோம்.

அதற்கான அனுமதி கடிதத்தை மீன்துறை உதவி இயக்குனருக்கு அளித்துள்ளோம். மீன்துறை உதவி இயக்குநரின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்தவுடன் வழக்கம்போல் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிந்தாலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர் என்று ஜெகதாபட்டினம் மீனவர் சங்க தலைவர் பாலமுருகன் தெரிவித்தார்.