ராமேசுவரம்:
டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தி வருகிறது. இதனால் மீன்பிடி தொழிலில் நஷ்டம் ஏற்படுவதாக ராமேசுவரம் மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து இன்று ராமேசுவரம் பஸ் நிலையம் முன்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர் சங்க தலைவர் போஸ் தலைமை தாங்கினார்.
இதில் 50-க்கும் மேற்பட்ட மீனவர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு டீசல் விலையை உயர்த்தி மீனவர்களின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு அழிக்கிறது என்று கோஷமிட்டனர்.
கச்சத்தீவு அருகே மீன் பிடிப்பதை தடுப்பதற்காக அந்த கடல் பகுதியில் இலங்கையில் உள்ள பழைய பஸ்களின் கூடுகளை வாங்கி கடலில் நிரப்பி வருகின்றனர். இதனால் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க வலைகளை விரிக்கும்போது அவை சிக்கி சேதம் அடைந்து விடும். அதுபோல படகுகளும் மோதி சேதம் அடைந்து விடும். இதனால் மீனவர்களுக்கு நஷ்டம் ஏற்படும்.
இதனை கண்டித்தும், மத்திய அரசு உடனடியாக இதுகுறித்து இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும், கடலில் நிரப்பப்பட்ட பஸ் கூண்டுகளை அப்புறப்படுத்த இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும் எனவும் கோஷமிட்டனர்.