தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ வைப்பார் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மகன் மெஸ்வந்த் (வயது 21). இவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார்.
கடற்கரை பதியில் நேற்று மாலை காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி உள்ளன.
அதனை சரிசெய்ய நங்கூரம் அமைப்பதற்காக மெஸ்வந்த் கடலில் 50 மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப்படகினை சரி செய்வதற்காக கடற்கரையிலிருந்து நீந்தி சென்றுள்ளார்.
அப்போது காற்றின் வேகம் அதிகரித்ததால் நீந்த முடியாமல் கடலில் மூழ்கினார்.
இதனை தொடர்ந்து அங்கிருந்த சக மீனவர்கள் கடலில் இறங்கி மெஸ்வந்தை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அதற்குள் மெஸ்வந்த் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அவரது உடலை மீட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வேம்பார் கடலோர காவல் படை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வேம்பார் கடலோர காவல் படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.