தீவிபத்து 
செய்திகள்

வீட்டு உபயோக உதிரிபாகங்கள் குடோனில் தீ விபத்து- பொருட்கள் எரிந்து நாசம்

திருவேற்காடு அருகே வீட்டு உபயோகபொருட்கள் உதிரிபாகங்கள் வைக்கப்பட்டுள்ள குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

மாலை மலர்

பூந்தமல்லி:

திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி, புளியம்பேடு செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தனியார் நிறுவனத்தின் வீட்டு உபயோக பொருட்களுக்கான உதிரிபாகங்கள் வைத்திருக்கும் குடோன் உள்ளது. இங்கு 30-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில்,நேற்று காலை திடீரென இந்த கிடங்கில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனைக்கண்ட ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

இதுகுறித்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் கிடங்கு முழுவதும் தீ பரவி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. தீ கட்டுக்கடங்காமல் இருந்து கரும்புகை சூழ்ந்து கொண்டதையடுத்து பூந்தமல்லி, மதுரவாயல், கோயம்பேடு, அம்பத்தூர் எஸ்டேட் பல்வேறு பகுதிகளிலிருந்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாலசுப்ரமணியம் தலைமையில் தீயணைப்பு அதிகாரிகள் ராஜேந்திரன், கோபால் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்தனர்.

அதன் பின்னர், இந்த கிடங்கின் சுற்றுச்சுவரை இடித்து அதன் வழியாக உள்ளே சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து நீண்ட போராட்டத்திற்கு பின் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீவிபத்தில் குடோனில் இருந்த உதிரி பாகங்கள் முற்றிலும் தீயில் எரிந்து சேதமானது. மேலும், பிரிட்ஜ், ஏ.சி. உள்ளிட்ட பொருட்களுக்கு வைக்கப்படும் கியாஸ் பொருந்திய சிறிய சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.