காடையாம்பட்டி:
சேலத்திலிருந்து தொப்பூர்- முத்தம்பட்டி வழியாக பெங்களூர் செல்லும் ரெயில்வே பாதை உள்ளது. இந்த பாதையில் இன்று காலை கட்டுக்கட்டாக பணம் சிதறி கிடப்பதாக அப்பகுதியினருக்கு தகவல் கிடைத்தது.
உடனே அந்த பகுதியை சேர்ந்த சிலர் சென்று பார்த்தனர். அப்போது அது போலி ரூபாய் நோட்டுகள் என தெரியவந்தது. நள்ளிரவு மர்ம நபர்கள் ரூ.2000, ரூ.500 போலி ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்துள்ளார்கள். சிறுவர்கள் விளையாட அந்த காகித பணத்தை அள்ளி சென்றனர்.
இதுபற்றி அப்பகுதி மக்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர். ஏதேனும் அசம்பாவித சம்பவத்துக்காக மக்களை திசை திருப்பும் நோக்கில் இந்த போலி ரூபாய் நோட்டுகள் வீசப்பட்டதா என்றும் விசாரணை நடந்து வருகிறது.