சென்னை:
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ‘யூனியன் பேங்க் ஆப் இந்தியா’ கிளை மேலாளர் மெக்டலின், போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலை சந்தித்து புகார்மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், ‘முகமது முசாமில் (வயது 34) உள்ளிட்டோர் போலி ஆவணங்கள் தயாரித்து, ரூ.1 கோடியே 44 லட்சத்து 22 ஆயிரத்து 550 கார் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர்’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த புகார் தொடர்பாக போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில், முசாமில் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அய்யாதுரை, ரவி, சர்க்கரைபாண்டியன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அப்போதைய வங்கி மூத்த மேலாளர் வெங்கட்ரமணன் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் பணத்துக்கு ஆசைப்பட்டு கடன் வழங்கியது விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் கே.சரவணக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆர்.சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஏ.சி.பிரபாகரன், ஜி.தியாகராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார், வெங்கட்ரமணனை அதிரடியாக கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.