சாயல்குடி:
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள பெரியகுளத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 35). இவர் ஆடு வளர்ப்பு தொழிலில் செய்து வருகிறார்.
இதற்காக அதே பகுதியில் உள்ள வயல்வெளி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
கிடாய் அமைத்துள்ள பகுதியில் உயர் அழுத்த மின்கம்பி செல்கிறது. நேற்று இரவு திடீரென மின்கம்பி அறுந்து பட்டியில் இருந்த ஆடுகளின் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி 44 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தன.
இன்று காலை பட்டிக்கு வந்த ஜெயராமன் மற்றும் குடும்பத்தினர் ஆடு மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.