ஊத்துக்கோட்டை:
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியம் கூடியம் இருளர் காலனியை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 35). கூலித்தொழிலாளி. இவரது நண்பர்
மாரிமுத்து(38). இவர்கள் இருவரும் சேர்ந்து போகி தினத்தன்று முயல் வேட்டைக்கு அங்குள்ள காட்டுப் பகுதிக்கு சென்றனர்.
கூடியம் கிராம எல்லையில் வீரராகவபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (55) என்ற விவசாயியின் வயலில் தற்போது நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ளது.
காட்டுப்பன்றிகள் அடிக்கடி வந்து நெற்பயிரை சேதம் செய்வதை தடுக்க ராஜேந்திரன் வயலுக்கு மின்சார வேலி அமைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கன்னியப்பன் வயலை கடக்கும்போது மின்வேலியை மிதித்ததில், மின்சாரம் பாய்ந்து பலியானார். நேற்று காலை அவர் வயலில் மின்சாரம் பாய்ந்து
இறந்து கிடந்ததை அக்கம் பக்கத்தினர் பென்னலூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் குமார் போலீசாருடன் அங்கு விரைந்து சென்று கன்னியப்பன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீஸ் கைது செய்வார்களோ? என்று பயந்து விவசாயி ராஜேந்திரன் அளவுக்கு அதிகமாக மது அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை போலீசார் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.