நாமக்கல்:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. ஊரடங்கு கட்டுப்பாடுகளால் நாமக்கல் மண்டலத்தில் கோழிப்பண்ணை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு 3லு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. கொரோனா 2-வது அலை பரவலால் இரவுநேர ஊரடங்கு அமலில் இருப்பதால் தினசரி உற்பத்தியாகும் முட்டைகளை முழுமையாக விற்பனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை.
முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற அச்சத்தில் முன் கூட்டியே முட்டைகளை விற்பனை செய்வதால், கொள்முதல் விலை குறைந்து வருகிறது. இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு, பிற மாநிலங்களில் பொது முடக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக முட்டை விற்பனை மேலும் சரிவைச் சந்தித்துள்ளது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக்கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக பண்ணையாளர்களிடையே ஆலோசிக்கப்பட்டது.
கொரோனா தொற்று அதிகரிப்பு, பிற மண்டலங்களில் முட்டை நுகர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முட்டை விலையில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 30 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 3.85ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
பண்ணையாளர்கள் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப முட்டை விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் எனவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
கடந்த 1-ல், 400 காசாக நிர்ணயம் செய்யப்பட்ட முட்டை கொள்முதல் விலை 3-ல் 410, 5-ல் 420, 8-ல் 435, 10-ல், 445, 12-ல், 460, 15-ல் 475, 17-ல், 485 என படிப்படியான உயர்ந்தது. கடந்த 22-ல், 35 காசு சரிந்து, 450, நேற்று முன்தினம் மேலும் 35 காசு குறைக்கப்பட்டு 415 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று மேலும் 30 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. பிற மண்டலங்களில் முட்டை விலை வருமாறு:-
பெங்களூரு-ரூ.4.10, சித்தூர்-ரூ.4.38, டெல்லி-ரூ.3.58, மைசூரு-ரூ.4.10, விஜயவாடா-ரூ.3.83.