முதலமைச்சர் பழனிசாமி 
செய்திகள்

மாவட்ட கலெக்டர்கள், மருத்துவ குழுவினருடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை

கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக அடுத்தகட்ட முடிவுகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

மாலை மலர்

சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அமலில் இருந்தாலும் ஒவ்வொரு மாதமும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு வருகிறது.

தற்போது மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை திரும்பினாலும் இன்னும் ஒரு சில கட்டுப்பாடுகள் ஊரடங்கில் தொடர்ந்து அமலில் உள்ளது. அந்த வகையில் இன்னும் பள்ளி- கல்லூரிகள் திறக்கப்படவில்லை. மெரினா கடற்கரை உள்பட பொழுது போக்கு பூங்காக்களும் முழுமையாக திறக்கப்படவில்லை. 100 பேர்களுக்கு மேல் கூடும் அரசியல் கூட்டங்களுக்கும் அனுமதி இல்லை.

கொரோனா தொற்று தமிழகத்தில் தற்போது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், அடுத்த மாதம் மேலும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக அடுத்த கட்ட முடிவுகளை மேற்கொள்ள முதலமைச்சர் பழனிசாமி மாவட்டக் கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்களுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது பல்வேறு புதிய தளர்வுகளை வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்பட இருக்கிறது.