சேலம்:
சேலம் மாநகர் பகுதியில் கொரோனா 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றை குறைக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒரே இடத்தில் 3 பேருக்கு மேல் கொரோனா நோய் பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அவர்களை உடனே சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அந்த இடம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது.
அதன்படி சூரமங்கலம், கொண்டலாம்பட்டி மண்டலங்கள் உள்பட மாநகராட்சியில் மொத்தம் 64 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. தடை செய்யப்பட்ட பகுதிகளின் நுழைவு பகுதியில் இரும்பு தகடு மூலம் வேலி வைத்து அடைக்கப்பட்டு உள்ளது.
அதன்படி தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் யாரும் செல்லக்கூடாது என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு மற்ற பகுதிகளில் இருந்து பொதுமக்கள் செல்வதாக புகார்கள் வந்தது. இதையடுத்து தடை செய்யப்பட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி செவ்வாய்பேட்டை உள்ளிட்ட அனைத்து தடை செய்யப்பட்ட பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.