சிவகங்கை:
மருத்துவ கல்லூரியில் 5 ஆண்டு எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவ- மாணவிகள் 4 ஆண்டுகள் படிப்பு முடித்த பின்னர் ஒரு ஆண்டு பயிற்சி டாக்டர்களாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிவார்கள். இதன் அடிப்படையில் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 4 ஆண்டு இளநிலை மருத்துவ படிப்பை முடித்து 1 ஆண்டு கால பயிற்சி மருத்துவர்களாக 99 மாணவர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்குமுன் இந்த பயிற்சி மருத்துவர்களின் பயிற்சி காலம் முடிவடைந்ததாக அறிவிப்பு வெளியானது. நேற்று திடீரென பயிற்சி காலம் நீட்டிக்கப்படுவதாக மருத்துவக்கல்வி இயக்குனரகம் அரசாணை வெளியிட்டு உள்ளது.
இதனால் தங்களது எதிர் காலம் பாதிக்கப்படுவதாக கூறி பயிற்சி மருத்துவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வாயிலில் அமர்ந்து கருப்பு கொடியை சட்டையில் குத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த அரசாைணயை திரும்பபெறும் வரை இந்த போராட்டத்தை தொடரப்போவதாக தெரிவித்துள்ளனர்.