பழனி:
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த 40 வயது பெண் பழனியில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தனிப்படை போலீசார் கண்ணூர் சென்று அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தனிப்படை போலீசார் கண்ணூர் சென்று நடத்திய விசாரணையில், அந்தப் பெண்ணுக்கும், அவருடன் வந்த நபருக்கும் திருமணமாகவில்லை என்பது தெரியவந்தது. இதனால் அவர்கள் தம்பதியே அல்ல என்ற உண்மை தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் பணம் பறிக்கும் நோக்கத்தில் கேரள போலீஸ் துறை பெயரை பயன்படுத்தி பழனி விடுதி உரிமையாளரை மிரட்டியுள்ளனர். தமிழகத்தில் இருந்து கண்ணூர் சென்ற தனிப்படை போலீசாருக்கு மருத்துவ அறிக்கை ஒன்று கிடைத்தது. அதில், அந்தப் பெண்ணுக்கு கூட்டு பாலியல் தொல்லை நடக்கவில்லை என்றும், அவரது உடலில் காயங்களோ, பிறப்பு உறுப்பில் பாதிப்போ ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும் என்றார்.