விமான பயணிகள் 
செய்திகள்

விமான நிலையங்களில் கொரோனா விதிகளை மீறுவோரிடம் உடனடி அபராதம் வசூலிக்க உத்தரவு - டிஜிசிஏ

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன. இன்று 56,211 பேருக்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன.

மாலை மலர்

புதுடெல்லி:

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கருத்தில் கொண்டு பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. 

இந்நிலையில், விமான நிலையங்களில் கொரோனா விதிகளை மீறுவோரிடம் உடனடியாக அபராதம் வசூலிக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக, இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

பல்வேறு விமான நிலையங்களை ஆய்வு செய்தபோது, கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைச் சரியாகப் பின்பற்றவில்லை என்பது தெரியவந்தது. ஆதலால், அனைத்துப் பயணிகளும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் உறுதிசெய்ய வேண்டும்.

முக கவசத்தை முறையாக மூக்கையும், வாய்ப் பகுதியையும் அணிவதையும் உறுதிசெய்ய வேண்டும். சமூக விலகலைக் கடைப்பிடித்து நடப்பதைக் கண்காணிக்க வேண்டும். கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும். முக கவசம் அணியாத பயணிகள், முக கவசத்தை முறையாக அணியாத பயணிகளிடம் போலீசார் உதவியுடன், விமான நிலைய அதிகாரிகள் உடனடி அபராதம் வசூலிக்கலாம் என தெரிவித்துள்ளது.