திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் புனித நீராடிய பக்தர்களை படத்தில் காணலாம். 
செய்திகள்

திருச்செந்தூர் கடலில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி

திருச்செந்தூர் கோவில் கடலில் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

மாலை மலர்

திருச்செந்தூர்:

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கோவிலில் கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதியில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

பின்னர் ஊரடங்கு தளர்வில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களை அனுமதித்தனர். எனினும் கோவில் கடற்கரைக்கு செல்லவும், கடலில் புனித நீராடவும் பக்தர்களை அனுமதிக்கவில்லை. அங்கு இரும்பு தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்தனர்.

இந்த நிலையில் சென்னை மெரினா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்லவும், குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் குளிக்கவும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து திருச்செந்தூர் கோவில் கடலில் நேற்று பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். எனினும் கோவில் நாழிக்கிணற்றில் குளிப்பதற்கு பக்தர்களுக்கு அனுமதிக்கவில்லை.