லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் தொலைக்காட்சி நிருபர் சுலாப் ஸ்ரீவஸ்தவா நேற்று இரவு திடீரென இறந்துவிட்டார். அவர் நேற்று இரவு வேலை முடிந்து தனது வீட்டிற்கு பைக்கில் சென்றபோது, சாலையோரத்தில் இருந்த குடிநீர் கைப்பம்பில் மோதி இறந்துவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் கள்ளச்சாராய மாபியாக்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பிரதாப்கர் மாவட்டத்தில் கள்ளச்சாராய மாபியாக்கள் தொடர்பான செய்தி வெளியிட்டதால் அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் ஸ்ரீவஸ்தவா, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பிய நிலையில், மறுநாள் இறந்துள்ளார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அவரது அரசு மீது பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
‘கள்ளச்சாராய மாபியாக்கள் அலிகார் முதல் பிரதாப்கர் வரை கொலை செய்துள்ளனர். ஆனால் உபி அரசாங்கம் மவுனம் காக்கிறது. உண்மையை அம்பலப்படுத்த பத்திரிகையாளர்கள் ஆபத்தான கேள்விகளைக் கேட்கிறார்கள். அரசு தூங்குகிறது. காட்டு தர்பாரை வளர்க்கும் உ.பி. அரசுக்கு, பத்திரிகையாளர் சுலாப் ஸ்ரீவாஸ்தவாவின் குடும்பத்தினரின் கண்ணீருக்கு ஏதேனும் பதில் இருக்கிறதா?’ என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.