சென்னை:
நிவர் புயலின் தாக்கத்தினால் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. மரங்கள் விழுந்ததால் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. வீடுகளின் கூரைகள் பெயர்ந்து காற்றில் அடித்துச் செல்லப்பட்டன.
சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதிலும் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கையும் நடைபெறுகிறது.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் கடலூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காலை 10 மணிக்கு சென்னை சைதாப்பேட்டையில் மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்கிறார்.