கொரோனா தடுப்பூசி 
செய்திகள்

இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி- நிபுணர் குழு நாளை ஆலோசனை

இந்தியாவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசியை பயன்படுத்துவது தொடர்பாக நாளை மருத்துவ நிபுணர் குழுவினர் மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்கள்.

மாலை மலர்

புதுடெல்லி:

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவை தயாரித்த கொரோனா தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இவற்றில் அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள மருந்தை உலகின் பல நாடுகள் பயன்படுத்த தொடங்கி உள்ளன.

இங்கிலாந்திலும் இந்த மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது 2-வதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள தடுப்பூசியை பயன்படுத்த இங்கிலாந்து அனுமதி அளித்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு மருந்தை இந்தியாவில் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதை இந்தியாவில் அவசர தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும்படி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் சீரம் நிறுவனம் அனுமதி கேட்டது.

இதுசம்பந்தமாக நிபுணர் குழு ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது. ஆக்ஸ்போர்டு மருந்துக்கு இங்கிலாந்து முதலில் அனுமதி அளிக்கவில்லை. தீவிர ஆய்வுக்கு பிறகு இப்போது தான் அனுமதி அளித்துள்ளனர்.

அந்த மருந்துக்கு இங்கிலாந்து அனுமதி அளித்து விட்டால், இந்தியாவிலும் அனுமதி கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதையடுத்து நேற்று சிறப்பு மருத்துவ நிபுணர் குழுவினர் மீண்டும் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது மேலும் பல விவரங்களை தரும்படி சீரம் நிறுவனத்திடம் கேட்டனர்.

இங்கிலாந்தில் எந்த அடிப்படையில் அந்த மருந்திற்கு அனுமதி அளித்திருக்கிறார்கள்? என்ற விவரங்களை தரும்படி கேட்டுக் கொண்டனர்.

இன்று அதுபற்றிய விவரங்களை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் மருத்துவக்குழுவிடம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து நாளை மருத்துவ நிபுணர் குழுவினர் மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்கள்.

மருந்து நிறுவனம் கொடுத்த தகவல் திருப்திகரமாக இருந்தால் அந்த மருந்தை பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கலாம் என மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்யும்.

இதை தொடர்ந்து ஜனவரி தொடக்கத்தில் கோவிஷீல்டு மருந்து பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு இருப்பதாக மத்திய சுகாதார அதிகாரிகள் கூறினார்கள்.

எனவே 2 வாரத்தில் இந்தியாவில் இந்த தடுப்பூசி போடப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.

தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததும் உடனடியாக அதை பொதுமக்களுக்கு பயன்படுத்த விரிவான திட்டங்களை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. அதன் அடிப்படையில் ஒத்திகைகளும் நடந்துள்ளன.

சீரம் நிறுவனம் தற்போது 4 கோடி டோஸ் மருந்துகளை தயார் நிலையில் வைத்துள்ளது. இந்தியாவில் முதல்கட்டமாக 30 கோடி பேருக்கு தடுப்பூசி போட திட்டமிட்டிருக்கிறார்கள். அவற்றை உடனடியாக தயாரித்து கொடுப்பதற்கும் அந்த நிறுவனம் ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதேபோல இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், புனேவில் உள்ள மத்திய அரசின் வைராலஜி ஆய்வு நிறுவனம் மற்றும் ஐதராபாத்தில் உள்ள பாரத்பயோடெக் நிறுவனம் ஆகியவை இணைந்து கோவேக்சின் என்ற தடுப்பூசி மருந்தை தயாரித்துள்ளன.

இதையும் அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்டிருக்கிறார்கள். அந்த மருந்து பற்றிய மேலும் விவரங்களையும் தாக்கல் செய்யும்படி நிபுணர் குழு கேட்டிருக்கிறது.

கோவேக்சின் மருந்து பயன்பாட்டுக்கு வர சற்று தாமதம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.