கொரோனா வைரஸ் 
செய்திகள்

நெல்லையில் இஸ்ரோ மைய ஊழியர்கள் உள்பட புதிதாக 190 பேருக்கு கொரோனா

தினசரி பாதிக்கப்படுவோர்களில் பாதிக்கு மேற்பட்டோர் நெல்லை மாநகர பகுதிகளை சேர்ந்தவர்களாக உள்ளனர். இதனால் மாநகர பகுதியில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

மாலை மலர்

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு இந்த ஆண்டில் முதல் முறையாக நேற்று 200-ஐ தாண்டியது.

தினசரி பாதிக்கப்படுவோர்களில் பாதிக்கு மேற்பட்டோர் நெல்லை மாநகர பகுதிகளை சேர்ந்தவர்களாக உள்ளனர். இதனால் மாநகர பகுதியில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மாவட்டத்தில் புதிதாக 190 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 101 பேர் மாநகர பகுதிகளை சேர்ந்தவர்கள். மேலும் பாளை, சேரன்மகாதேவி, வள்ளியூர், களக்காடு, ராதாபுரம், பாப்பாக்குடி, நாங்குநேரி, மானூர், அம்பை உள்பட மாவட்டம் முழுவதும் தொற்று பரவலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் சென்னை டாக்டர் உள்பட 4 பேருக்கு மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இஸ்ரோ மையத்தில் 2 ஊழியர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கல்லிடைக்குறிச்சியில் ஒரே தெருவில் 3 பேருக்கும், அருகில் மற்றொரு தெருவில் 2 பேருக்கும் தொற்று உறுதியானது.

பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 17,432 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று 38 பேர் குணமடைந்தனர். இதுவரை 16,060 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போது அரசு மருத்துவமனை மற்றும் வீடுகளில் 1,153 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நெல்லை மாநகர பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் நெல்லை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை அவர் உயிரிழந்தார்.