கோப்புப்படம் 
செய்திகள்

சிங்கப்பூரில் இருந்து கொரோனா அறிகுறியுடன் வந்த புதுகை பெண்

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் கொரோனா அறிகுறியுடன் பெண் பயணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

திருச்சி:

திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், மலேசியா, துபாய், மஸ்கட், ஓமன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களில் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக இந்திய அரசின் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த விமானங்களில் பயணம் செய்வதற்கு எந்த நாட்டில் இருந்து பயணம் செய்ய இருக்கிறார்களோ அந்த நாட்டு அரசின் சார்பில் பயணம் செய்பவருக்கு கொரோனா நோய் அறிகுறி இல்லை என சான்றிதழ் பெற்ற பின்பே விமானத்தில் பயணம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என இந்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை 7.30 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் 169 பயணிகள் பயணம் செய்தனர். இந்த விமானத்தில் கொரோனா நோய்க்கான அறிகுறி உள்ளது என சான்றிதழுடன் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது பெண் பயணி ஒருவர் பயணம் செய்வதற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக மாவட்ட கலெக்டருக்கும், நோய் தடுப்பு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக திருச்சி விமான நிலையத்திற்கு வந்த அதிகாரிகள் பயணியை சோதனை செய்து விட்டு அவரை உடனடியாக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்திய அரசின் விதிகளை மீறி கொரோனா அறிகுறி உள்ள பயணியை அழைத்து வருவது திருச்சி விமான நிலையத்தில் கடந்த ஒரு வாரத்தில் இது 2-வது முறை என தெரிய வருகிறது. இதனால் திருச்சி விமான நிலையம் பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.