ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை 
செய்திகள்

ராஜீவ்காந்தி அரசு மருத்துவனையில் 50 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்ற 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனாவுக்கு 50 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்ற 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

மாலை மலர்

சென்னை:

மத்திய தொழில் பாதுகாப்பு படையின் தலைமை காவலராக இருந்து வருபவர் வெங்கடேசன்(வயது 52). இவருக்கு திடீரென கடந்த செப்டம்பர் மாதம் 11-ந்தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு செய்யப்பட்ட பரிசோதனையில் வெங்கடேசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

இந்த நிலையில் அவருக்கு உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களும் இருந்ததால், அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தபோதிலும் அவருக்கு தீவிர சிகிச்சை தேவைப்பட்டதால், 3 முறை பிளாஸ்மா ஏற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 65 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னர் வெங்கடேசன் நேற்று முன்தினம்(திங்கட்கிழமை) குணமடைந்து வீடு திரும்பினார்.

இதைப்போல் ஆதம்பாக்கம், அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 40). இவரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த 2012-ம் ஆண்டு இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் நுறையீரலில் 75 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டதால், தொடர்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவரும் 50 நாட்களுக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். 50 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய இருவரையும், மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் தேரணிராஜன், மருத்துவ நிலைய அதிகாரி டாக்டர் சுப்பிரமணியன், சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் ரா.ராகவேந்திரன் ஆகியோர் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.