கோப்பு படம் 
செய்திகள்

கொரோனா மருந்து பதுக்கலா?- புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

கொரோனா சிகிச்சை மருந்துகளை பதுக்கும் நபர்களை பற்றி தகவல் அறிந்தால் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளிக்கலாம் என்று போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.

மாலை மலர்

திருப்பூர்:

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், உயிர் காக்கும் மருந்தாக விளங்கும் ‘ரெம்டெசிவிர்’ போன்றவற்றை தேவைக்கு ஏற்ப தடையின்றி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மருந்து பதுக்கலை தடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் துணை கலெக்டர் நிலையில் சிறப்பு அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் போலீசாரின் உதவியுடன் மருந்து பதுக்கல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வார் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.இது குறித்து கலெக்டர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தனியார் மருத்துவ மனைகளோ, மருந்தகங்களோ, மருந்து வர்த்தகர்களோ, தனி நபர்களோ அத்தியாவசிய மருந்துகளை பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம். குறிப்பாக, ‘ரெம்டெசிவிர்’ மருந்துகளை பதுக்க வேண்டாம்.அதையும் மீறி பதுக்கலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டால் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகள் பதுக்கல் தடை சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பதுக்கிய மருந்துகளை பறிமுதல் செய்வதுடன், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து கைது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைபாயும்.

இவ்வாறு, கலெக்டர் எச்சரித்துள்ளார்.

திருப்பூர் போலீஸ் கமி‌ஷனர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரெம்டெசிவிர் மற்றும் பிற கொரோனா சிகிச்சை மருந்துகள் மக்களுக்கு கிடைப்பதை தடுத்தாலோ மற்றும் பதுக்கி வைத்தாலோ சட்டப்படி குற்றம். கொரோனா சிகிச்சை மருந்துகளை பதுக்கும் நபர்களை பற்றி தகவல் அறிந்தால் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளிக்கலாம். இதுதொடர்பாக தகவல் தெரிவிக்கும் நபர்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும். 9498181209, 04212243324 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.