மாட்டுவண்டியில் வந்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது எடுத்த படம். மயூரா ஜெயக்குமார் அருகில் உள்ளார். 
செய்திகள்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து மாட்டு வண்டியில் வந்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து, மாட்டு வண்டியில் வந்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மாலை மலர்

கோவை:

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோவை காந்திபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் வீனஸ்மணி, வக்கீல் கருப்புசாமி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாட்டு வண்டியில் வந்து கலந்து கொண்டனர். மேலும் இதில் கலந்து கொண்டவர்கள் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மயூரா ஜெயக்குமார் கூறும்போது, கொரோனா காரணமாக பலரும் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு சாதாரண மக்களை மிகவும் பாதித்துள்ளது. விலைவாசியும் உயர்ந்து உள்ளது. மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் சலுகை வழங்கி ஏழை மக்களை கஷ்டத்துக்குள்ளக்குகிறார்கள் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் எச்.எம்.எஸ். ராஜாமணி, சுந்தரமூர்த்தி, காந்தகுமார், சிவக்குமார், சாய்சாதிக், ராமநாகராஜ், வெற்றிலை கருப்பசாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.