தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் அர்ச்சுனன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் அழகுமுத்துப்பாண்டியன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் போராடி வருகின்றனர். மத்திய அரசு விவசாய சங்கங்களை அழைத்து பேசி விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது.
நாளை(வெள்ளிக்கிழமை) தூத்துக்குடி, கோவில்பட்டி, ஓட்டப்பிடாரத்திலும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) எட்டயபுரம், திருச்செந்தூர், உடன்குடியிலும், 6-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஸ்ரீவைகுண்டம், கயத்தாறு, ஆழ்வார்திருநகரியிலும் தொடர் மறியல் போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தில் கட்சி ஊழியர்கள், பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் அறிக்கையில் கூறி உள்ளனர்.