கைது 
செய்திகள்

ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்ய முயன்ற துணை ராணுவப்படை வீரர் கைது

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்ய முயன்ற துணை ராணுவப்படை வீரர் கைது செய்யப்பட்டார்.

மாலை மலர்

ஜோலார்பேட்டை:

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிதாஸ். இவருடைய மகன் பைஜும் (வயது32). இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் துணை ராணுவப் படையில் பணியாற்றி வருகிறார். விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றிருந்த பைஜும் விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பினார்.

இதற்காக நேற்றுமுன்தினம் கேரளாவில் இருந்து சென்னை செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். அவர் பயணம் செய்த அதே பெட்டியில் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்வதற்காக 19 வயது இளம் பெண், தனது பெற்றோருடன் பயணம் செய்தார்.

நள்ளிரவு 2 மணியளவில் தி்ருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில்நிலையத்தை கடந்து சென்று கொண்டிருந்தபோது, தூங்கிக்கொண்டிருந்த இளம்பெண்ணிடம், துணை ராணுவப்படை வீரர் பைஜும் சில்மிஷம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்தப் பெண் பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து ரெயில் காட்பாடிக்கு வந்ததும் அங்கே இறங்கி காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக காட்பாடி ரெயில்வே போலீசார் அந்த நபரை பிடித்து, சம்பவம் நடந்த இடம் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசுக்கு உட்பட்டது என்பதால் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசுக்கு அனுப்பி வைத்தனர்.

ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சபரிநாத் வழக்குப்பதிவு செய்து துணை ராணுவப்படை வீரர் பைஜும்மை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.