கோப்புப்படம் 
செய்திகள்

அம்மா இருசக்கர வாகனத்திற்கு விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் விஷ்ணு தகவல்

நெல்லை மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனத்திற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

2020-21-ஆம் ஆண்டு உழைக்கும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகன திட்டத்தின்கீழ், இருசக்கர வாகனங்கள் வாங்க 50 சதவீதம் மானியம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நெல்லை மாவட்டத்தில் இந்த திட்டத்தில் மானியம் பெறுவதற்கு வாகன வகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிக்கு மானியத்தொகை அதிகபட்சமாக ரூ.31 ஆயிரத்து 250 வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற தகுதியான பெண்கள், கீழ்க்கண்ட விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

18 வயது முதல் 45 வயது உடைய உழைக்கும் மகளிர் மட்டும் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஆதரவற்ற மகளிர், விதவைகள், முதிர்கன்னிகள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பங்களை http://www.tnatws.org/ என்ற இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். அலுவலக நாட்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு அனுப்பவேண்டும், ஆதிதிராவிடர்களுக்கு 21 சதவீதமும், பழங்குடியினருக்கு 1 சதவீதமும், மாற்றுத்திறனாளிக்கு 4 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.