வத்தல்மலையில் மேற்கொள்ளப்படும் சுற்றுலா வளர்ச்சி பணிகளை கலெக்டர் திவ்யதர்சினி பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
செய்திகள்

வத்தல்மலையில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

வத்தல்மலையில் நடைபெற்று வரும் சுற்றுலா வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாலை மலர்

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் வத்தல்மலையில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் நல்ல குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால் வத்தல்மலையை சுற்றுலா தலமாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அந்த மலை கிராமங்களில் அரசு புறம்போக்கு நிலங்களில் தாவரவியல் பூங்கா, ஏரி, பார்வை கோபுரம், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட சுற்றுலா மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வத்தல்மலைக்கு புதிய தார்சாலைகள் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே தர்மபுரி கலெக்டர் திவ்யதர்சினி வத்தல்மலை கிராமத்திற்கு நேரில் சென்று வளர்ச்சி திட்டப்பணிகள், சுற்றுலா மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்தார். தோட்டக்கலைத்துறை சார்பில் அமைய உள்ள தாவரவியல் பூங்கா பணிகளை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கினார்.

இதனிடையே வத்தல்மலைக்கு செல்லும் வழியில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதை பார்வையிட்ட கலெக்டர் இந்த பணிகளை ஒரு மாதத்துக்குள் முடிக்க உத்தரவிட்டார். மேலும் அந்த மலை கிராமங்களில் மேற்கொள்ள வேண்டிய திட்டப்பணிகள் குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் குமரேசன், ஒன்றியக்குழு தலைவர் நீலாபுரம் செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள்மொழித்தேவன், மகாலிங்கம், ஒன்றிய பொறியாளர்கள் அன்பழகன், சுமதி, தாசில்தார் ரமேஷ், ஒப்பந்ததாரர் ஜெயப்பிரகாஷ் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள்உடனிருந்தனர்.

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கலெக்டர் திவ்யதர்சினி திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது அங்குள்ள கூடுதல் கட்டிடத்தை பார்வையிட்ட அவர் அங்கு சிகிச்சைக்கான படுக்கை வசதிகளை கூடுதலாக அமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின்போது மருத்துவக்கல்லூரி முதல்வர் அமுதவல்லி, இருப்பிட மருத்துவ அலுவலர் சந்திரசேகர், மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளர் சிவகுமார் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.