சென்னை:
சென்னை அம்பத்தூரை அடுத்த அயனம்பாக்கத்தில் வசித்து வந்த தனியார் மருத்துவக் கல்லூரி பேராசிரியை கரோலின் பிரிசில்லா, தனது மகள் இவாலினுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மொபட்டில் சூப்பர் மார்க்கெட் சென்றார்.
தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையின் சர்வீஸ் சாலையில் நொளம்பூர் அருகே சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி மழைநீர் கால்வாய்க்குள் மொபட் விழுந்ததில் தாய்-மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, சென்னையில் பைக்கில் இருந்து தவறி மழை நீர் கால்வாயில் விழுந்து தாய், மகள் உயிரிழந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்தார்.
இந்நிலையில், நொளம்பூரில் பைக்கில் இருந்து தவறி மழை நீர் கால்வாயில் விழுந்து இறந்த தாய், மகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம், பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.