விபத்து பலி 
செய்திகள்

மெரினாவில் கார் மோதி முதியவர் பலி

மெரினாவில் கார் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சென்னை:

சென்னை திருவல்லிக்கேணி அயோத்தி குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 55). இவர், அப்பகுதியில் உள்ள ஒரு நடைபாதை கடையில் வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் ஜெயபால் நேற்று மாலை மெரினா காமராஜர் சாலையில் விவேகானந்தர் இல்லம் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் அதிவேகமாக வந்த கார் இவர் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட ஜெயபால் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான முதியவரின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், காரில் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற டிரைவரை அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் தேடி வருகின்றனர்.