சென்னை:
இந்திய கடலோர பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னையை சேர்ந்த 9 மீனவர்கள் ‘ருக்மணி’ என்ற படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் (புதன்கிழமை), ‘ருக்மணி’ படகின் என்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து படகில் இருந்த மீனவர்கள் செய்வது அறியாது திகைத்தனர். அப்போது புதுச்சேரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான ‘டோர்னியர்’ விமானத்தில் இருந்த வீரர்கள், மீனவர்கள் தத்தளிப்பதை பார்த்தனர்.
இதையடுத்து விமானத்தில் இருந்த வீரர்கள் அருகில் இருந்த இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான ஐ.சி.ஜி.எஸ். அனக் என்ற கப்பலுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்து சென்று தத்தளித்த மீனவர்களையும், படகையும் மீட்டு கடலோர பாதுகாப்பு படையினர் கடலூர் அருகே உள்ள தளத்துக்கு கொண்டு வந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.