சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வருகிறார்கள்.
இதனால் சென்னை மாநகராட்சி மூலம் கொரோனா சிகிச்சை மையங்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 12 மையங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது 13-வது மையமாக தரமணியில் உள்ள சென்னை பல்கலைக்கழக முதுநிலை மாணவர் விடுதி சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு வருகிறது.
அங்கு 900 படுக்கைகள் அமைக்கப்பட்டு கொரோனா தொற்று பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த மையத்தை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் இன்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு நிலைமையை அறிந்து கொரோனா சிகிச்சை மையங்கள், கவனிப்பு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.
13-வது மையமாக செயல்படும் இந்த விடுதியில் 900 பேர் சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொற்று பரவாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.