சி.பி.ஐ. 
செய்திகள்

டெல்லியில் வங்கிகளில் ரூ.1,200 கோடி மோசடி - அரிசி ஏற்றுமதி நிறுவனத்தின் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு

டெல்லியில் வங்கிகளிடம் இருந்து ரூ.1,200 கோடி வரை கடன் பெற்று மோசடி செய்த அரிசி ஏற்றுமதி நிறுவனத்தின் மீதும் அதன் நிர்வாகிகள் 6 பேர் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு பல்வேறு மாநிலங்களிலும் கிளைகள் உள்ளது.இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் இந்த நிறுவனத்தில் தணிக்கை செய்யப்பட்டபோது நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த தனியார் நிறுவனம் கனரா வங்கி உள்ளிட்ட பல வங்கிகளிடம் இருந்து ரூ.1,200 கோடி வரை கடன் பெற்று மோசடி செய்தது தற்போது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அந்த அரிசி ஏற்றுமதி நிறுவனத்தின் மீதும் அதன் நிர்வாகிகள் 6 பேர் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த நிர்வாகிகளுக்கு சொந்தமான 8 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.