உதயநிதி ஸ்டாலின் 
செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

உதயநிதி ஸ்டாலின் தன் மீதான குற்ற வழக்கு விவரங்களை வேட்பு மனுவில் தெரிவிக்கவில்லை, தவறான தகவலை தெரிவித்துள்ளார் என மனுதாரர் கூறி உள்ளார்.

மாலை மலர்

சென்னை:

தமிழக சட்டசபை தேர்தலில், சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என கூறி உள்ளார். 

உதய நிதி ஸ்டாலின் தனது வேட்பு மனுவில், தன் மீதான குற்ற வழக்கு விவரங்களை தெரிவிக்கவில்லை, தவறான தகவலை தெரிவித்துள்ளார், அதனால் அவரது தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் மனுதாரர் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள், 2 வாரங்களில் தேர்தல் ஆணையம் மற்றும் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 1ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.